பின் தொடர்வோர்

Saturday 11 November 2017

328.ஆசார ஈனன்

328
பொது
 
            தானான தான தனதன தானான தான தனதன
             தானான தான தனதன                தனதான
 
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
     னாகாத நிச னநுசிதன்                            விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
     னாகாச நிர்ம ணனல்வளி                         யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
     வாயாத பாவி யிவனென                    நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
     மாஞான போத மருள்செய                   நினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
     வேதாள ராசி பசிகெட                          அறைகூறி
 மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
     மீதேற வேல்கொ டமர்செயு               மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
     கூறாம னீய அவனுகர்                          தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
     கோலாக நாத குறமகள்                        பெருமாளே
 
 பதம் பிரித்தல்

ஆசார ஈனன் அறிவிலி கோபா பராதி அவகுணன்
ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன்

ஆசார ஈனன் - ஒழுக்கம் குறைவாக உள்ளவன். அறிவிலி - மூடன் கோபா பராதி - கோபம் காரணமாக குற்றம் பல செய்பவன் அவகுணன் - கெட்ட குணம் படைத்தவன் ஆகாத நீசன் - யாவர்க்கும் ஆகாத இழிந்த தன்மை உடையவன் அனுசிதன் - தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன் விபரீதன் - மாறுபாடான புத்தியை உடையவன்


ஆசா விசாரம் வெகு வித மோகா சரீத பரவசன்
ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி

ஆசா விசார - மண், பொன், பெண் என்னும் மூவாசைகளிலேயே எண்ணத்தைச் செலுத்துபவன் வெகு வித - பல விதமான மோகா சரித - ஆசைச் செயல்களைக் கைக்கொண்ட பரவசன் - தன்மயம் இழந்தவன் ஆகாசம், நீர், மணல், அனல், வளி - விண், நீர், மண், தீ, காற்று என்ற ஐந்து பூதங்களுக்கு அப்பால் உரு மாறி - வெவ்வேறு உருவம் எடுத்து.

மாசு ஆன நால் எண் வகை தனை நீ நான் எனாத அறிவு உளம்
வாயாத பாவி இவன் என நினையாமல்

மாசு ஆன - குற்றங்கள் நிறைந்த நால் எண் வகை தனை - குணப் பண்பு, தொழில் பண்பு ஆகிய முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட (இந்த உருவங்களை). நீ நான் எனாத - நீ என்பதும், நான் என்பதுமான பிரிவைக் காணாத அறிவு உளம் வாயாத - ஞான உள்ளம் வாய்க்கப் பெறாத. பாவி இவன் என நினையாமல் - பாவி இவன் என்று நினைத்து என்னை ஒதுக்கி விடாமல்.

மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி
மா ஞான போதம் அருள் செய நினைவாயே


மாதா பிதாவின் அருளால் - தாய் தந்தையரின் அருள் நலம் மாறா - நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத மகாரில் எனை - உன் குழந்தையாகிய என் மீது இனி – இனிமேல் ஆயினும் மா ஞான போதம் அருள்வாயே - சிறந்த ஞான உபதசத்தை அருள்செய்வதற்கு நினைவாயே - திருவுள்ளத்தில் நினைத்து அருள வேண்டும்.

வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசி கெட அறை கூறி


வீசால - பரந்த வேலை - கடலை சுவறிட – வற்றும் படியும் மா சூரர் மார்பு தொளை பட - பெரிய சூரார்களின் மார்பு தொளை படவும் வேதாள ராசி பசி கெட - வேதாள கணங்களின் பசி கெடவும் அறை கூறி - போருக்கு வரும்படி அசுரர்களை அழித்து

மேக ஆரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம்
மீது ஏற வேல் கொடு அமர் செயும் இளையோனே

மேக ஆரவாரம் என - மேகங்களில் பேரொலியோ இது என்னும்படி அதிர் போர் - முழங்கும் சண்டையில் யாது தானர் - அசுரர்கள் அனைவரும் எம புரம் மீது ஏற - யமன் உலகத்துக்குப் போகும்படி வேல் கொடு அமர் செயும் - வேல் கொண்டு சண்டை செய்த இளையோனே - இளையவனே

கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எ(ன்)னும் உரை
கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம்

கூசாது - அஞ்சாமல் வேடன் உமிழ் தரு நீராடி - கண்ணப்பனாகிய வேடன் வாயினினின்றும் உமிழ்ந்த அபிஷேக நீரில் திளைத்து ஊன் உண் எனும் உரை - இந்த மாமிசம் சுவை உள்ளது, உண்ணவும் என்னும் சொல்லை கூறா - சொல்லி மன் - நிரம்ப ஈய - கொடுக்க அவன் நுகர் தரு சேடம் - அந்த வேடன் எச்சில் செய்து கொடுத்த பாக்கியை

கோது ஆம் எனாமல் அமுது செய் வேத ஆகம ஆதி முதல் தரு
கோலோக நாத குற மகள் பெருமாளே.

கோது ஆம் எனாமல் - குற்றமானது என்று பாவிக்காமல் அமுது செய் - உண்டவரும் வேத ஆகம ஆதி முதல் - வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும் முதல்வரான சிவ பெருமான் தரு - பெற்ற கோ - தலைவனே லோக நாத - உலகங்களுக்கு நாதனே குற மகள் பெருமாளே - குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே ( கோலோக நாதன் எனபதை கோ + லோகநாதன் என இப்படியும் பிரிக்கலாம் பாற்கடல் கடைந்த போது ஐந்து தருக்களும், ஐந்து பசுக்களும் தோன்றின. நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. இவை சிவலோகத்தில் ஒருபுறத்தில் இருக்கும் கோலோகத்தில் வசித்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால், தயிர், நெய் கோமயம், கோஜலம், கோரோசனை முதலிய ஆறு திவ்ய பொருட்களைக் கொடுக்கும். பசு கூட்டத்திற்கு தலைவனே எனப் பொருள் கொள்ளலாம்- நடராஜன் )

சுருக்க உரை
ஒழுக்கம் குறைந்தவன், பெருங் கோபத்தால் பல குற்றம் செய்பவன், இழி குணத்தன், அசுத்தன், மூவாசைகளால் பீடிக்கப்பட்டவன், காம நூல்களைக் கற்றுத் தன் வசம் இழந்தவன், ஐந்து பூதங்களால் ஆன முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட உடலோடு ஞானம் இல்லாத பாவி என்று நினைத்து என்னை ஒதுக்கி விடாமல், என்னை உன் குழந்தையாகப் பாவித்து, இனி மேலாவது எனக்கு ஞான உபதேசத்தை அருள உன் திருவுள்ளத்தில் நினைந்தருள வேண்டும்.
கடல் வற்றும்படியும், வேத கணங்களுக்குப் பசி தணியவும் அறை கூறிச் சூரனைப் போருக்கு அழைத்து அசுரர்களை அழித்தவனே. கண்ணப்பனாகிய வேடன் உமிழ் நீரால் எச்சில் படுத்திக் கொடுத்த மாமிசத்தைத் தகாது என்று ஒதுக்கி விடாமல் அதை உண்ட வேத முதல்வனான சிவபெருமான் பெற்ற குமரனே. உலக நாயகனே.வள்ளியின் கணவனே. எனக்கு ஞான உபதேசம் அருளுக.
விளக்கக் குறிப்புகள்

1மாசான நாலெண் வகைதனை ......
 உயிர்ப் பொருள்களின் குணங்கள் 32 . (குணப் பண்பு 27, தொழில்பண்பு 5).
குணப்பண்பு (27) - அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, உவப்பு,  இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு,எளிமை, வய்த்தல், துன்பம்,  இன்பம், இளமை, மூப்பு இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி.  தொழில் பண்பு (5) - துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல்.
2கூசாது வேடன் உமிழ்தரு நீராடி....
இது கண்ணப்பர் வரலாற்றைக் குறிகும். இதன் விளக்கம்
திண்ணனார் என்னும் வேடன் வேட்டை ஆடக் காளத்தி மலைக்குச் சென்ற போது, அம்மலையில் சிவபிரானது திருவுருவச் சிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
தம்முடன் வந்த நாணன் என்பவரைப் பச்சிலையையும், பூவையும் அச்சிலைக்கு இட்டது யார் என்று வினவினார். ஒரு அந்தணர் இங்ஙனம் பூசை செய்வதாக அறிந்து, அது முதல் தாமும் அங்ஙனமே தினமும் பூசை செய்யத் தொடங்கினார். இதை அறிந்த சிவகோசரியார் ஆகிய அந்தணர் சீற்றம் கொண்டு, இறைவனை அபசாரம் செய்தவனைத் தண்டிக்க வேண்டினார். இறைவன் மறு நாள் மறைந்திருந்து திண்ணப்பரின் அன்பைக் காணுமாறு பணித்தார். திண்ணப்பர் மறு நாள் வந்ததும் இறைவன் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதை பதைத்தார்.  பச்சிலையில் உதிரம் நிற்காமல் போகவே, தன் ஒரு கண்ணைக் எடுத்து இறைவன் கண்ணில் வைத்தார். இரத்தம் நின்றது. ஆனால் இரத்தம் மற்ற கண்ணிலிருந்து வடிய ஆரம்பித்தது. கண்ணப்பராகிய திண்ணனார் தமது அடுத்த கண்ணையும் பறிக்க முயன்ற போது, இறைவன் நில்லு கண்ணப்ப என்று அவரைத் தடுத்து ஆட்கொண்டார்.

 --------------------------புன வேடன்
  பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
  பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே.......... திருப்புகழ், மச்ச மெச்சு
 
  கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
  கூறாம னீய அவனுகர் தரு சேடங்.....................திருப்புகழ்ம், ஆசாரவீன.

 இதவிய காணிவை ததை என வேடுவன்....திருப்புகழ், அதலசேதடனாராட

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்துகோத்து அங்கு
அழல்உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பாத்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்தருளும் என்றார்---
       பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்


3. யாது தானர் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.

No comments:

Post a Comment