பின் தொடர்வோர்

Wednesday 4 October 2017

324. அடியார் மனஞ்சலிக்க

324
பொது

களிகூர என் தனக்கு மயில் ஏறி வந்து முத்தி
கதி ஏற அன்பு வைத்து உன் அருள் தாராய்

          தனதான தந்த னத்த தனதான தந்த னத்த
           தனதான தந்த னத்த                    தனதான

 
அடியார்ம னஞ்ச லிக்க எவராகி லும்ப ழிக்க
     அபராதம் வந்து கெட்ட                        பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
     அனலோட ழன்று செத்து                   விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
     கலியோடி றந்து சுத்த                      வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
    கதியேற அன்பு வைத்து                    னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
     தழல்மேனி யன்சி ரித்தொர்                    புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
     தழல்பார்வை யன்ற ளித்த                     குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
     வெளியாக வந்து நிர்த்த                  மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்குறத்தி
     மிகுமாலொ டன்பு வைத்த                   பெருமாளே.
 
பதம் பிரித்து உரை
 
அடியார்கள் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க
அபராதம் வந்து கெட்ட பிணி மூடி

அடியார் மனம் சலிக்க - அடியவர்கள் மனம் சலிக்கும்படியும் எவராகிலும் பழிக்க - யாரேனும் பழித்தால். அபராதம் வந்து - அதனால் பிழை ஏற்பட்டு. கெட்ட பிணி மூடி - பழிப்பதனால் ஏற்பட்டு கெட்ட நோய்கள் சுற்றிக் கொண்டு.

அனைவோரும் வந்து சீ சீ என நால்வரும் சிரிக்க
அனலோடு அழன்று செத்து விடுமா போல்

அனைவோரும் வந்து - எல்லோரும் வந்து. சிச்சி என - சீ சீ என்று. நால்வரும் சிரிக்க - நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க. அனலோடு உழன்று - நெருப்பில் வெந்து.
செத்து விடுமா போல் - இறந்து விடுவது போல்.


கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த
கலி ஓடு இறந்து சுத்த வெளியாகி

கடையேன் - மிக இழிந்தவனாகிய என்னுடைய மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று குற்றங்கள். முற்றும் - முழுவதும் இருநோய் - நல்வினை, தீ வினை என்ற இரண்டு நோயுடன் பிடித்த - என்னைப் பிடித்துள்ள கலியோடு இறந்து - தரித்திரத்தோடு அழிபட்டு  சுத்த வெளியாகி -
ஞான பரிசுத்த பர வெளி புலப்பட்டதாகி.


களிகூர என் தனக்கு மயில் ஏறி வந்து முத்தி
கதி ஏற அன்பு வைத்து உன் அருள் தாராய்

என்றெனக்கு களி கூர - எனக்கு மகிழ்ச்சி மிக்கு எழுபொருட்டு மயிலேறி வந்து - மயிலின் மீது ஏறி வந்து முத்தி கதி ஏற - முத்தி வீட்டை நான் அடையுமாறு அன்பு வைத்து உன் அருள் தாராய் - என் மீது அன்பு வைத்து உன்னுடைய திருவருளைத் தந்தருளுக.


சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த
தழல் மேனியன் சிரித்து  ஒர் புரம் மூணும்

சடை மீது கங்கை வைத்து - சடையின் மீது கங்கையைச் சூடி. விடை ஏறும் எந்தை - இடப வாகனத்தின் மேல் ஏறும் என் தந்தையாகிய சிவ பெருமான். சுத்த தழல் மேனியன் - பரிசுத்தமான நெருப்பு மேனியன். சிரித்து ஓர் புரம் மூணும் - சிரித்து ஒப்பற்ற புரங்கள் மூன்றும்.

தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த
தழல் பார்வை அன்று அளித்த குருநாதா

தவிடாக - தவிடு பொடியாகவும். வந்து எதிர்த்த - வந்து தன்னை எதிர்த்த. மதன் ஆகமும் - மன்மதனுடைய உடலை. சிதைத்த - சிதைத்து அழியுமாறு செய்த.
தழல் பார்வை - அக்கினி நேத்திரதில்(நெருப்புக் கண்).
அன்று அளித்த குரு நாதா - அன்று வெளிப்பட்ட குருநாதரே


மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே

 அண்டருக்கு மிடி தீர - தேவர்களுக்குத் துன்பம் தீர . மயிலேறி - மயில் மீது ஏறி. வஞ்சர் கொட்டம் -
வஞ்சகர்களாகிய அசுரர்களின் இறுமாப்பும் கெடுதியும் வெளியாக வந்து - வெளியாகும்படி வந்து.
நிர்த்தம் அருள்வோனே - நடனம் புரிபவனே.


மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளங் குறத்தி
மிகு மால் அன்பு வைத்த பெருமாளே.
 
மின நூல் - மின்னல் போலவும் நூல் போலவும் நுண்ணிய. மருங்குல் - இடை. பொற்பு - அழகிய. முலை மாது - கொங்கையை உடைய பெண். இளங் குறத்தி - சிறியவளான வள்ளியின் மீது. மிகு மாலொடு அன்பு  வைத்த பெருமாளே - மிக்க ஆசை வைத்த பெருமாளே.

சுருக்க உரை

அடியார்களுடைய மனம் சலிக்கும்படி யாராவது பழித்தால் அதனால் பிழைஏற்பட்டு, பிணி உற்று நெருப்பில் வெந்து இறந்து விடுவது போல், மிக இழிந்தவனாகிய என்னுடைய மும்மலங்களும், இரு வினைகளும், சுத்தமான ஞான பர வெளி புலப்பட்டு, என்னைப் பிடித்துள்ள தரித்திரமும் அழிபட, மயில் மீது ஏறி வந்து, உன் திருவடியைத் தந்தருளுக.
 
சடையில்   கங்கையைச்  சூடியுள்ள இடப  வாகனனாகிய  சிவ
பெருமானுடைய நெற்றிக் கண்களிலிருந்து அன்று மன்மத னுடைய உடல்  எரிந்து அழிய நெருப்பு வெளிப்பட்ட சிவனுக்குக் குருநாதரே, தேவர்கள்  துயரம் நீங்க வஞ்சகர் களாகிய அசுரர்களை ஒழித்து நடனம் புரிந்தவனே, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய வள்ளி நாயகி மீது ஆசை மீது அன்பு வைத்த பெருமாளே, நான் கதி ஏற அருள் தாராய்.   

விளக்கக் குறிப்புகள்
  
1 அடியார்ம னஞ்சலிக்க........
ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேச ரெதிர்நிற்ப தரிராமே தேசு வளர்
செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிர வன் கிரணம்
தங்கு மணல் நிற்காதே தான்                          --- நீதி வெண்பா

2. ..சிரித்தொர் புரமூணும் தவிடாக........
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்..              .---திருப்புகழ், குருவியென்

திரிபுரம் எரித்த வரலாறு:

தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் 3 பறக்கும் கோட்டைகள் பெற்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் இழைத்து  வந்தனர்.

 தேவர்கள் சிவபிரானிடம் தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டனர். மனம் இரங்கிய முக்கண்ணர் அவர்களோடு தாம் போர் புரிவதற்காக தேர் ஒன்றைத் தயார் செய்யும்படி கட்டளையிட்டார்.

தேவர்களும் அவரது ஆணைக்கிணங்க பூமியைத் தட்டாகவும், வானத்தை விதானமாகவும், சூரிய சந்திரர்களை சக்கரங்களாகவும்,  நான்கு வேதங்களை  குதிரைகளாகவும், நான்கு திசைகளைத் தூண்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் தேரை உருவாக்கினர். பிரம்மா சாரதி; மேருமலை வில்; வாசுகி பாம்பு நாண்;  விஷ்ணு அம்பு; அம்பின் நுனி அக்னி; அம்பின் வால் வாயு; இப்படியாகத் தயார்  செய்து இறைவனிடம் விண்ணப்பித்தனர்.

இறைவனும் தேரில் எழுந்தருளினான். முப்புரத்து அசுரர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரம் அப்போது. அந்த நேரத்தில் தேவர்களுக்கு மனத்துக்குள் ஒரு சிந்தனை. எல்லோருக்கும் ‘நாம் இல்லாவிட்டால் சிவபிரான் அசுரர்களோடு எப்படி போர் செய்ய முடியும்?  நாம் தான் அசுரர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கப் போகிறோம்’ என்று அகந்தை கொண்டனர்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு இவர்கள் நினைப்பு தெரியாதா? நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது என்ற கதையாக தேவர்களின் அகந்தையை நீக்கிட இறைவன் திருவுள்ளம் கொண்டார்.

உடனே தேரை விட்டுக் கீழிறங்கினார். அச்சமயம் 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அவற்றைப் பார்த்து இறைவன் புன்னகைத்தார். அவ்வளவுதான்... அவர் புன்னகையிலிருந்து புறப்பட்ட நெருப்பு மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தது. தங்கள் உதவியில்லாமலே இறைவன் அசுரர்களை அழித்ததைக் கண்ட தேவர்கள் அகந்தை நீங்கி அடி தொழுது உய்ந்தனர்.

இந்த வரலாறே சிவாலயங்களில் தேரோட்டத்திற்கு அடிப்படை.

அவ்வரலாற்றால்  அறியத் தக்க உண்மையை அறியப்படுவது என்ன வென்றால். `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத்தருளுவன்` என்னும் உண்மையையே.

3. வந்தெ ர்த்த மதனாக முஞ்சிதைத்த.......
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
ணாட்ட மறசர ணீட்டி மதனுடல் திருநீறாய்- திருப்புகழ், பாட்டிலுருகிலை
    


No comments:

Post a Comment