பின் தொடர்வோர்

Friday 30 June 2017

320.மாலி னாலெடுத்த

320
வைத்தீசுரன் கோயில்

          தான தான தத்த தந்த தான தத்த தந்த
          தான தான தத்த தந்த          தனதான

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்ந்த பொந்தி
   மாறி யாடெ டுத்த சிந்தை                            யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி நேனை யாஎ னக்கி ரங்கி
   வாரை யாயி நிப்பி றந்து                           இறவாமல்
வேலி நால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
   வீடு தாப ரித்த அன்பர்                             கணமூடே
மேவு யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
   வேளெ யாமெ னப்ப ரிந்து                         அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
   கால பாநு சத்தி யங்கை                           முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
   காளை யேறு கர்த்த னெந்தை                      யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
   சூரை யோது பத்த ரன்பி                          லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
   சேவல் கேது சுற்று கந்த                           பெருமாளே

பதம் பிரித்து உரை

மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி
மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய

மாலினால் எடுத்த - ஆசையே ஒரு உருவாகி கந்தல் சோறினால் - துணியும் சோறும் கொண்டு வளர்ந்த - வளர்க்கப்படும் பொந்தி - உடல் மாறி ஆடும் - மாறி மாறி எண்ணம் கொள்ளும் சிந்தை - உள்ளம் அநியாய - (இவை தமை) அநியாயமான


மாயையால்  எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி
வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல்

மாயையால் எடுத்து - (உலக) மாயையால் எடுத்தவனாகி மங்கினேன் - வாட்டம் உறுகின்றேன் ஐயா - ஐயனே எனக்கு இரங்கி - என் மேல் இரக்கம் கொண்டு வாரும் ஐயா - வருக, ஐயனே இனி - இனிமேல் பிறந்து இறவாமல் - பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்

வேலினால் வினை கணங்கள் தூள் அதா(க) எரித்து உன் தன்
வீடு தா பரித்த அன்பர் கணம் ஊடே

வேலினால் - வேலாயுதத்தால் வினைக் கணங்கள் - எனது வினைக் கூட்டங்களை தூளதாக எரித்து - தூளாகும்படி எரித்து உன்றன் வீடு தா - உனது மோட்ச வீட்டைத் தந்து அருளுக பரித்த - அன்பு நிறைந்த அன்பர் கணம் ஊடே - அடியார் கூட்டத்தில்

மேவி யான் உனைப்போல் சிந்தையாகவே களித்து கந்த 
வேளே ஆம் என பரிந்து அருள்வாயே

யான் மேவி - நானும் கலந்து உனைப் போல் - உன்னை போல சிந்தையாகவே - (பரிசுத்த) உள்ளம் பெறவே களித்து - மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே - கந்த வேளே ஆம் என - நமக்கு உற்ற தூணையாகும் என்று பரிந்து அருள்வாயே - அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக

காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி அம் கை முருகோனே

காலினால் - காற்றினால் எனப் பரந்த - பரந்தது போல பரந்த - பரவியிருந்த சூரர் மாள - சூரர்கள் மடியும்படி வெற்றி கொண்ட - வெற்றி கொண்ட கால - யமன் போன்ற வ்லிமையும் பாநு - சூரியன் போன்ற பேரொளியைக் கொண்ட அம் கை முருகோனே - சத்தி வேலை அங்கையில் கொண்ட முருகனே

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த
காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா

காம பாணம் அட்ட - மன்மதப் பாணங்களை வருத்தியதால்
அனந்த கோடி -
கணக்கில்லாத மாதரைப் புணர்ந்த - மாதர்களுடன் புணர்ந்த காளை - காளையாகிய திருமாலாகிய இடப வாகனத்தின் மீது  ஏறு கர்த்தன் - ஏறுகின்ற தலைவன்
என்தை அருள் பாலா - என் தந்தையாகிய சிவபெருமான் பெற்ற பாலனே

சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து
சீரை ஓது(ம்) பத்தர் அன்பில் உறைவோனே

சேலை நேர் - சேல் மீனை ஒத்த விழிக் குறப் பெண் - கண்ணை உடைய குற மாதாகிய வள்ளியை அசை - ஆசையுடன் தோள் உறப் புனர்ந்து - அவள் தோள் பொருந்தச் சேர்ந்து சீரை - உனது புகழை ஓதும் - ஓதுகின்ற பத்தர் - அடியார்களின்
அன்பில் உறைவோனே - அன்பில் வீற்றிருப்பவனே

தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த
சேவல் கேது சுற்று கந்த பெருமாளே


தேவர் மாதர் - தேவர்களும், மாதர்களும் சித்தர் - சித்தர்களும் தொண்டர் - தொண்டர்களும் ஏக - சென்று வணங்க வேளூருக்கு உகந்த - பூள்ளிருக்கு வேளூர் என்னும் தலத்தை மகிழ்ந்த (பெருமாளே) சேவல் கேது - சேவற்கொடி சுற்றும் - சுற்றியிருக்க மகிழும் கந்த பெருமாளே - கந்தப் பெருமாளே

சுருக்க உரை

ஆசையே உருவாகி அமைந்த கந்தையும், சோறு கொண்டு வளர்க்கப்படும் உடல், பல எண்ணங்களைக் கொண்ட உள்ளம் இவைகளை எடுத்தாவனாகி, ஐயனே, வாட்டம் உறுகின்றேன் இனி எனக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாமல் இருக்கவும், உன் கையில் ஏந்திய வேலால் என் வினைகள் நீங்கித் தூளாகும்படி மோட்ச வீட்டைத் தந்து அருளுக 

உனதடியார் கூட்டத்தில் நானும் கலந்து, பரிசுத்தமான உள்ளம் பெற, கந்த வேளே உற்ற துணையாகும் என்று நான் சிவலோக நிலையை அடைய அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக மன்மதனுடைய பாணத்தால் பல கோடி மாதர்களைப் புணர்ந்த காளையாகிய திருமாலாகிய விடையின் மேல் ஏறிய சிவபெருமான் அருளிய குழந்தையே சேல் மீன் போன்ற கண்களை உடைய வள்ளியின் தோள்கள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே தேவர்களும் சித்தர்களும் வணங்கும் புள்ளிருக்கும் வேளூரில் உகந்த பெருமாளே சேவல் கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே என்னைப் பரிந்து அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

சோறினால் வளர்ந்த பொந்தி 
சோற்றைத் துருத்திச் சுமைசுமப்பக் கண் பிதுங்கக்
காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே
                                       தாயுமானவர், பராபரக் கண்ணி

வாரையா வாரும் ஐயா என்பதின் மரூஉ

வேலினால் வினைக் கணங்கள் தூளதா
வினையோட் விடும் கதிர் வேல மறவேன்  -கந்தர் அனுபூதி 
வினை எறியும் வேற் கரமும்   -திருப்புகழ், விரைசொரியு

காளை ஏறு கர்த்தன் எந்தை

திரிபுரங்களை  எரிக்கச் சிவபெருமான் எழுந்தருளிய போது, இறைவன் வெற்றி அடையப் போவது நம்மால் என்று தேவர்கள் நினைத்தனர் இதை உணர்ந்த சிவன் தேரைச் சற்று அழுத்த தெர் ஒடிந்து யாவரும் நிலை கலங்கினர் அப்போது திருமால் காளையாகி இறைவனைத் தாங்கினார்

தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ
                                       திருவாசகம் திருச்சாழல்

அநந்த கோடி மாதரைப் புணர்ந்த
நரகாசுர வதம் செய்து அவனால் கொண்டு போகப்பட்ட மந்தர மலையின் சிகரமான ரத்ன கிரியில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ கன்னிகைகள் பதியாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்து கொண்டார்

பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு
பெளவ மெறிதுவரை
எல்லரும் சூழச்சிங் காசனத்தே

இருந்தானைக் கண்டாருளர்     பெரியாழ்வார் திருமொழி 

Wednesday 21 June 2017

319.எத்தனை கோடி

319
வைத்தீசுரன்கோயில்

(புள்ளிருக்கு வேளூர்)


                  தத்தன தானதான தத்தன தானதான
                  தத்தன தானதான                      தனதான


எத்தனை கோடிகோடி விட்டுட லோடியாடி
     யெத்தனை கோடிபோன                 தளவேதோ
இப்படி மோகபோக மிப்படி யாகியாகி
     யிப்படி யாவதேது                        இனிமேலோ
சித்திடில் சீசிசீசி குத்திர மாயமாயை
     சிக்கினி லாயுமாயு                       மடியேனைச்
சித்தினி லாடலோடு முத்தமிழ் வாணரோது
     சித்திர ஞானபாத                        மருள்வாயே
நித்தமு மோதுவார்கள் சித்தமெ வீடதாக
     நிர்த்தம தாடுமாறு                       முகவோனே
நிட்கள ரூபர்பாதி பச்சுரு வானமூணு
     நெட்டிலை சூலபாணி                  யருள்பாலா
பைத்தலை நீடுமாயி ரத்தலை மீதுபீறு
     பத்திர பாதநீல                            மயில்வீரா
பச்சிள பூகபாளை செய்க்கயல் தாவுவேளூர்
     பற்றிய மூவர்தேவர்                    பெருமாளே
    

பதம் பிரித்து உரை

      எத்தனை கோடி கோடி விட்டு உடல் ஓடி ஆடி
      எத்தனை கோடி போனது அளவு ஏதோ

    எத்தனை கோடி கோடு விட்டு - எத்னையோ கோடிக்கணக்கான உடல் ஓடி ஆடி - உடல்களை விட்டுப் புது உடலில் ஓடிப் புகுந்து எத்தனை கோடி போனது - எத்தனையோ கோடிப் பிறப்புகள் வந்து போய் விட்டன அளவு ஏதோ - இதற்கு அளவும் உண்டோ? (இல்லை என்றபடி)


     இப்படி மோக போகம் இப்படி ஆகி ஆகி
     இப்படி ஆவது ஏது இனி மேல்(ஓ)

இப்படி மோக போகம் - இவ்வாறு மோகமும், போகமும் கலந்து இப்படி ஆகி ஆகி - இவ்வாறு பிறந்து பிறந்து இப்படி ஆவது ஏது - இப்படி ஆய்க் கொண்டு வருவது ஏனோ? இனி மேலோ - இனிமேல் (ஓ)


     சித்திடில் சீசி சீ சி குத்திரம் மாய மாயை
     சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்திடில் - சிந்தித்துப் பார்த்தால்  சீசி சீசி குத்திர மாய - இழிவான இந்த மாயமான மாயை - வாழ்க்கை சிக்கினில் ஆயும் - இதன் சிக்கில் அகப்பட்டு மாயும் அடியேனை - இறக்கின்ற அடியேனை


     சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
     சித்திர ஞான பாதம் அருள்வாயே
சித்தினில் ஆடலோடு - அறிவுத் துறையில் பயில்வித்து முத்தமிழ் - முத்தமிழ் வல்ல வாணர் - புலவர்கள் ஓது(ம்) - ஓதிப் போற்றும் சித்திர ஞான பாதம் அருள்வாயே - அழகிய ஞான மயமான திருவடியைத் தந்தருளுக

      நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக
     நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே

நித்தமும் ஓதுவார்கள் - நாள் தோறும் உன்னை ஓதிப் போற்றுபவர்களின் சித்தமெ - உள்ளமே வீடு அதாக - இருப்பிடமாக நிர்த்தம் அது - அதில் நடனம் புரியும் ஆறு முகவோனே - ஆறு முகம் உடையவனே


     நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு
  சூல பாணி அருள் பாலா

    நெட்டிலை நிட்கள - அருவமும் ரூபர் - உருவமும் உள்ளவர் பாதி பச்சு உருவான - பாதி உருவம் பச்சை நிறத்தினர் மூணு நெட்டிலை - மூன்று நீண்ட இலைகளை உடைய சூலபாணி - சூலத்தைக் கையில் ஏந்திய சிவபெருமான் அருள் பாலா - பெற்ற குழந்தையே

    பை தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறும்
     பத்திர பாத நீல மயில் வீரா

பைத் தலை - (ஆதிசேடனது) படம் கொண்ட தலைகள் நீடும் - பெரிய ஆயிரத் தலை மீது - ஆயிரம் தலைகளின் மேலே பீறும் - கீறிக்கிழிக்கும் பத்திர பாதம் - நொச்சி இலை போன்ற கால்களை உடைய நீல மயில் வீரா - நீல மயல் வாகனனே

     பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர்
    பற்றிய மூவர் தேவர் பெருமாளே

பச்சிள - பசிய இளம் பூகம் பாளை - கமுக மரத்தின் மடலின் மீது செய் - வயலில் உள்ள கயல் தாவு - கயல் மீன்கள் தாவுகின்ற வேளூர் - வேளூர் என்னும் தலத்தில் பற்றிய - விரும்பி வீற்றிருக்கும் மூவர் - அரி, அயன், அரன் ஆகிய மூவரும் தேவர் - தேவர்களும் போற்றும் பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

அளவில்லாத பிறவிகள் எடுத்து வருந்தும் அடியேனை அறிவுத் துறையில் பயில்வித்து உன் ஞானமாகிய திருவடியைத் தந்தருளுக

நாள்தோறும் உன்னைப் பணிபவர்கள் உள்ளத்தில் நடனம் புரிபவனே, அருவமும் உருவமும் ஆக உள்ள சூலத்தைக் கையில் ஏந்தியவரான சிவபெருமானின் குழந்தையே, பாம்பின் தலைகளைக் கீறிக் கிழக்கும் நொச்சி இலை போன்ற கால்களை உடைய நீல மயில் வீரனே, தேவர்கள் பெருமாளே, உன்னுடைய ஞான பாதங்களை அருள்வாயே


விளக்கக் குறிப்புகள்


சீசி சீசி குத்திர 
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ       -- திருநாவுக்கரசர் தேவாரம்
நித்தமும் ஓதுவார்கள் சித்தம்
சொற் கோலத்தே நாற்காலைச் சேவிப்பார்
சித்தத் துறைவோனே     ருப்புகழ்,  பொற்பூவைச்சீரை
பத்தரி பாதம் நீல மயில்
மயிலின் அடியை நொச்சியின் இலைக்கு உவமை கூறுவது
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி      ---குறுந்தொகை