பின் தொடர்வோர்

Friday 26 May 2017

313.இல்லையென நாணி

313

வெள்ளிகரம்

வெள்ளிகரம் 9 திருப்புகழ் பாடல்களிலும் வள்ளிமலை, வள்ளிபிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப்புனம், அவள் கொடுத்த தினைமாவு, அவள்மீது காதல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகிய அனைத்தையும் சொல்வதைப் பார்த்தால் தேவசேனையை மறந்து விட்டார் போலும் என்று சொல்லத் தோணும்.


        தய்யதன தான தய்யதன தான
                 தய்யதன தான                  தனதான
        
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
    லௌளினள வேனும்                       பகிராரை
 எவ்வமென நாடி யுய்வகையி லேனை
    யெவ்வகையு நாமங்                       கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
    தொல்லைமுத லேதென்              றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
   துய்யகழ லாளுந்                          திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
    மையவரை பாகம்                          படமோது
  மையுலாவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங்                      கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
    வெள்ளிலுட னீபம்                   புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
    வெள்ளிநகர் மேவும்                     பெருமாளே


பதம் பிரித்து உரை

இல்லை என நாணி உள்ளதில் மறாமல்
எள்ளின் அளவேனும் பகிராரை

இல்லை என நாணி - இல்லை என்று சொல்லுவதற்கே வெட்கப்பட்டு உள்ளதில் - உள்ள பொருள் அளவுக்கு  மறாமல் - மறுக்காமல் எள்ளின் அளவேனும் - ஒரு எள்ளின் அளவாவது பகிராரை - பகிர்ந்து கொடுக்காதவர்களை

எவ்வம் என நாடி உய் வகை இலேனை
எவ்வகையும் நாமம் கவியாக

எவ்வம் என - வெறுக்கத் தக்கவர்கள் என்று நாடி - ஆயந்தறிந்து உய் வகை இலேனை - பிழைக்கும் வகை இல்லாத என்னை எவ்வகையும் - எந்த முறையிலும் நாமம் - உன்னுடைய திருநாமங்களை கவியாக - பாடலாக அமைத்து

சொல்ல அறியேனை எல்லை தெரியாத
தொல்லை முதல் ஏது என்று உணரேனை

சொல்ல அறியேனை - சொல்லுவதற்குத் தெரியாத என்னை எல்லை தெரியாத - முடிவெல்லை காண முடியாத தொல்லை - பழைய முதல் ஏது என்று - மூலப் பொருள் இன்னது என்று உணரேனை - உணராத என்னை


தொய்யும் உடல் பேணு(ம்) பொய்யனை விடாது
துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ

தொய்யும் - இளைத்துத் துவளும் உடல் பேணும் - இந்த உடம்பை விரும்பிப் போற்றும் பொய்யனை - பொய்யனாகிய என்னை விடாது - புறக்கணித்து ஒதுக்கி விடாமல் துய்ய - பரிசுத்தமான கழல் - (உனது) திருவடி ஆளும் - ஆண்டு அருளும்
திறம் ஏதோ - வழி ஏதேனும் உண்டோ

வல்ல அசுரர் மாள நல்ல சுரர் வாழ
மைய வரை பாகம்பட மோது(ம்)

வல் அசுரர் மாள - வலிய அசுரர்கள் இறக்கவும் நல்ல சுரர் - நல்ல தேவர்கள் வாழவும் மைய வரை - குற்றமுள்ளவர்களை பாகம் பட - கூறுபட்டு அழிய மோதும் - மோதின

மை உலவு சோலை செய்ய குளிர் சாரல்
வள்ளி மலை வாழும் கொடி கோவே

மை உலவு சோலை  - இருள் சூழ்ந்த சோலைகளையும் செய்ய - செவ்விய குளிர் சாரல் - குளிர் வாய்ந்த மலைப் பக்கங்களையும் உடைய  கொடி கோவே - கொடி போன்ற வள்ளியின் கணவருமாகிய தலைவனே

வெல்லும் மயில் ஏறு வல்ல குமரேச
வெள்ளில் உடன் நீபம் புனைவோனே

வெல்லும் மயில் ஏறும் - வெல்ல வல்ல மயிலின் மீது ஏறும் வல்ல குமரேச - வலிமை மிகுந்த குமரக் கடவுளே வெள்ளில் உடன் - விளா மரத்தின் தளிருடன் நீபம் - கடப்ப மாலையை புனைவோனே - அணிபவனே

வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி
வெள்ளி நகர் மேவும் பெருமாளே

வெள்ளி - வெண்ணிறமான மணி மாடம் - அழகிய மாடங்கள் மல்கும் - நிறைந்த திரு - அழகிய வீதி - தெருக்களை உடைய வெள்ளிநகர் மேவும் பெருமாளே - வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே


சுருக்க உரை

தம்மிடம் உள்ள பொருளில் ஒரு எள்ளளவு கூட பகிரந்து கொடுக்காதவர்களை அறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னைஎந்த முறையிலும் உன் திரு நாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லத் தெரியாத என்னை, முழு முதல் பொருள் இன்னது என உணராத என்னைப் புறக்கணித்துத் தள்ளி விடாமல், உனது திருவடி ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ?


வலிய அசுரர்கள் அழியவும், நல்ல தேவர்கள் வாழவும் போரிட்டவனே, வள்ளி நாயகியின் கணவனே வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே பொய்யனாகிய என்னை ஆளுந் திறம் ஏதோ

No comments:

Post a Comment